92. அல் லைல் - குர்ஆன்
- 1. (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
- 2. பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
- 3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
- 4. நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
- 5. எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
- 6. நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
- 7. அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
- 8. ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
- 9. இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
- 10. அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
- 11. ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
- 12. நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
- 13. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
- 14. ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
- 15. மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
- 16. எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
- 17. ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
- 18. (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
- 19. மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
- 20. மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
- 21. வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.