80. அபஸ - குர்ஆன்
- 1. அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
- 2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
- 3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
- 4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
- 5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
- 6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
- 7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
- 8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
- 9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
- 10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
- 11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
- 12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
- 13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
- 14. உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
- 15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
- 16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
- 17. (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
- 18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
- 19. (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
- 20. பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
- 21. பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்` ஆக்குகிறான்.
- 22. பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
- 23. (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
- 24. எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
- 25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
- 26. பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
- 27. பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
- 28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
- 29. ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
- 30. அடர்ந்த தோட்டங்களையும்,
- 31. பழங்களையும், தீவனங்களையும்-
- 32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
- 33. ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
- 34. அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
- 35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
- 36. தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
- 37. அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
- 38. அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
- 39. சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
- 40. ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
- 41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
- 42. அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.