• 1. இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

  • 2. நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

  • 3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

  • 4. திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

  • 5. `ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்` என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

  • 6. "ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.

  • 7. தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

  • 8. அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?

  • 9. மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

  • 10. அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

  • 11. ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

  • 12. (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

  • 13. (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-

  • 14. அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

  • 15. உறவினனான ஓர் அநாதைக்கோ,

  • 16. அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

  • 17. பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

  • 18. அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.

  • 19. ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.

  • 20. அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

பகிர்
logo
logo
logo
logo